போலி முகவரியை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் கோர்ட்டில் மாவோயிஸ்டு ஆஜர்

போலி முகவரியை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்டு ரூபேஷ் சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2019-07-11 21:30 GMT
சிவகங்கை,

தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த மாவோயிஸ்டு ரூபேஷ் உள்பட 5 பேர்கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது ரூபேஷ் உள்ளிட்டவர்கள் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளையான்குடி அருகே இடையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் முகவரியை தவறாக பயன்படுத்தி போலியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைக்கு கேரள சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரூபேஷ் சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது ரூபேஷ் இந்த வழக்கின் குற்ற பத்திரிக்கை ஆவணங்களை ஆங்கிலத்தில் வழங்கக் கோரி மாவட்ட நீதிபதி கார்த்திகேயனிடம் மனு அளித்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் வருகிற 26-ந் தேதி ரூபேசை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்