சின்னசேலம் அருகே, பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-12 22:30 GMT
சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள தகரை புதுக்காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 48). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி(45). இவர்களுடைய மகள் கோகிலா(17). இவர் நாககுப்பத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் கோகிலா கடந்த சில நாட்களாக படிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாய் ஜோதி படிக்குமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த கோகிலா சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோதி சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்