நெல்லிக்குப்பம் அருகே, சாலையோரம் பிணமாக கிடந்த தொழிலாளி - போலீஸ் விசாரணை

நெல்லிக்குப்பம் அருகே சாலையோரமாக தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-12 22:45 GMT
நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டீஸ்வரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர் புதுச்சேரி மாநிலம் கன்னியக்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர், நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள க‌‌ஸ்டம்ஸ் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது அங்கு மோகன் பிணமாக கிடந்த பகுதியில், அவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் சேதமடைந்து கிடந்தது. இதன் மூலம் அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாலை விபத்தில் மோகன் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்