பரமத்தி வேலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

பரமத்தி வேலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2019-07-12 21:45 GMT
பரமத்தி வேலூர், 

பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரக உட்கோட்டம் சார்பில் பரமத்தி வேலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பரமத்தி வேலூர் சிவா தியேட்டர் நான்கு சாலையில் இருந்து தொடங்கி பொத்தனூர் நான்கு சாலை, கடைவீதி, அண்ணாசாலை, பள்ளிசாலை வழியாக சென்று கந்தசாமி கண்டர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

நிகழ்ச்சியின்போது ஹெல்மெட் அணிந்து வந்த பொதுமக்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மரக்கன்றுகளை வழங்கி, மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முன்னதாக சட்டத்தையும், நீதிமன்ற உத்தரவினையும் மதித்து நடப்போம் என்றும், இரசக்கர வாகனத்தை ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து ஓட்டுவோம் எனவும், ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக இருசக்கர வாகனத்தினை ஓட்ட காவல்துறை சார்பில் வலியுறுத்துவோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், நல்லூர் மற்றும் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த போலீசார் இருசக்கர வாகனங்களில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்