வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; பெண் பலி மகன் காயம்

வெண்ணந்தூர் அருகே, மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மகன் காயம் அடைந்தார்.

Update: 2019-07-12 22:00 GMT
வெண்ணந்தூர், 

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து உள்ள தேங்கல்பாளையம் குடித்தெரு பகுதியில் வசித்து வருபவர் மணிவண்ணன். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி ஜோதி (வயது 46). இவர்களது மகன் கிரிதரன் (24).

இந்த நிலையில் தாய், மகன் இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக மல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கீரனூர் பஸ் நிறுத்தம் அருகே எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிளும், அவ்வழியாக வந்த ஒரு காரும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கிரிதரன் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு மல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடிவருகிறார்.

மேலும் செய்திகள்