குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் 3 கி.மீ நடந்து வந்து பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் 3 கி.மீ நடந்து வந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-12 21:45 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கேட்டு முற்றுகை, சாலைமறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் இந்த போராட்டங்கள் தினசரி நடந்து வருகிறது. இந்த ஊராட்சியை சேர்ந்த கொண்டாபுரம், கொண்டாபுரம் காலனி, கொண்டாபுரம் ஒட்டர் காலனியில் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இவர்கள் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலிகுடங்களுடன் 3 கி.மீ. தூரம் நடந்து வந்து சோளிங்கர்-திருத்தணி பிரதான ரோட்டில் சமத்துவபுரம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்கு உடனடியாக டிராக்டர் கள் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரியாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே ஒன்றியத்தை சேர்ந்த அய்யனேரி ஊராட்சி ஞானகொள்ளி தோப்பு கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் காலிகுடங்களுடன் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு நேற்று முற்றுகையிட்டனர். சமத்துவபுரம் சாலைமறியல் பிரச்சினையை முடித்துக்கொண்டு அலுவலகம் திரும்பிய அதிகாரிகள் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஞானகொள்ளிதோப்பு கிராம மக்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்களை ஒருவழியாக சமாளித்து முற்றுகை போராட்டத்தை கைவிட செய்தனர்.

மேலும் செய்திகள்