நடுக்கடலில் ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை நடவடிக்கை

நடுக்கடலில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

Update: 2019-07-12 22:45 GMT

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த பாலவன்னியன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சங்கர் (வயது 45), நாகூர் (26), கவியரசன் (20), ராஜூ (18), செட்டி (35), மோர்ப்பண்ணை கிராமத்தை சேர்ந்த கிட்டிணன் (54) ஆகிய 6 மீனவர்கள் கடந்த 11–ந்தேதி மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். இந்திய கடல் எல்லையை தாண்டி வந்து மின்பிடித்ததாக கூறி அந்த படகையும், அதில் இருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 பேரையும் சிறைபிடித்து சென்றனர்.

பின்னர் அவர்கள் 6 பேரும் இலங்கையில் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையால், சம்பந்தப்பட்ட 6 மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். அவர்கள் 6 பேரையும் பத்திரமாக மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் செய்திகள்