மனுநீதி நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சாந்தா வழங்கினார்

மனுநீதி நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

Update: 2019-07-12 22:30 GMT
மங்களமேடு, 

பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் (வடக்கு) கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய்த் துறை மூலம் இலவச வீட்டு மனைப்பட்டா, நத்தம் பட்டா நகல் மற்றும் மாற்றம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 29 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டம், விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகைகள் திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்.

கூட்டுறவுத் துறை மூலம் விவசாயக் கடன் திட்டத்தின் கீழ் 125 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான உதவிகளும், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.11 லட்சத்து 39 ஆயிரத்து 947 உதவித்தொகையும், மாவட்ட சமூக நலத்துறை மூலம் 30 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் முதல்- அமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளையும் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 277 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 31 லட்சத்து 72 ஆயிரத்து 31 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட உதவி கலெக்டர் மனோகரன், வேளாண் துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சந்தானகிருஷ்ணன், வேப்பந்தட்டை தாசில்தார் கவிதா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்