மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரி நிரம்பியது மக்கள் மகிழ்ச்சி
மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரி நிரம்பி உள்ளது. இதன் காரணமாக மும்பைவாசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மும்பை,
மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரி நிரம்பி உள்ளது. இதன் காரணமாக மும்பைவாசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மும்பைக்கு குடிநீர்
மும்பையில் வசிக்கும் மக்களுக்கு தினசரி 3 ஆயிரத்து 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் மாநகராட்சியால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் மோடக்சாகர், துல்சி, விகார், தான்சா, பட்சா, மேல் வைத்தர்ணா, மத்திய வைத்தர்ணா ஆகிய 7 ஏரிகளில் இருந்து கிடைக்கிறது. கடந்த மாதம் இந்த 7 ஏரிகளிலும் சேர்த்து வெறும் 5 சதவீதமே தண்ணீர் இருப்பு இருந்தது.
நகரில் 10 சதவீத தண்ணீர் வெட்டு அமலில் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக பருவமழையை மும்பைவாசிகள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.
துல்சி ஏரி நிரம்பியது
இந்தநிலையில் பருவமழை தாமதமாக தொடங்கினாலும், கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதில் நேற்று துல்சி ஏரி தனது முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
இதையடுத்து அந்த ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. துல்சி ஏரி நிரம்பி இருப்பது மும்பைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்யும் பட்சத்தில் மற்ற ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.