பழனி பஸ்நிலையத்தில் நடைமேடை ஆக்கிரமிப்பால் அவதிக்குள்ளாகும் பயணிகள்

பழனி பஸ்நிலையத்தில் நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

Update: 2019-07-13 22:30 GMT
பழனி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பஸ் மூலமாகவே பழனிக்கு வந்து, அங்கிருந்து திருஆவினன்குடி மற்றும் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். முன்னதாக பஸ் நிலையத்துக்கு வரும் பக்தர்கள் நடைமேடை ஆக்கிரமிப்பு காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதாவது, பயணிகளுக்கான நடைமேடையை ஆக்கிரமித்து பலர் கடைகளை அமைத்து அதில் பல்வேறு பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். அதேபோல் டீக்கடை வைத்துள்ளவர்கள் பலகாரம் தயாரிப்பதற்காக கடை முன்புள்ள நடைமேடையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நடைமேடையில் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் பழைய பஸ்நிலையத்தின் கிழக்கு பகுதியில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டு, அமர்வதற்காக இருக்கைகள் போடப்பட்டன. ஆனால் தற்போது அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பழக்கடைகள், வளையல் உள்ளிட்ட பேன்சி பொருள் விற்பனை கடைகளாக மாறி உள்ளது.

இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழையின் போது ஒதுங்கி நிற்பதற்கு கூட இடமில்லாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்