வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய தச்சுதொழிலாளி வெட்டிக்கொலை தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு

கும்பகோணத்தில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய தச்சு தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-07-14 23:00 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசலாற்று வெளிநடப்பு ரெங்கர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது40). தச்சுதொழிலாளி. இவருக்கு திருமணமாகி கல்பனா என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர். கல்பனா திருவாரூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரும் அவருடைய தந்தையும் குடித்துவிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருவரும் படுக்க சென்று விட்டனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் முத்துக்குமார் வீட்டிலிருந்து வெளியே வராததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டின் மொட்டைமாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு முத்துக்குமார் ரத்தவெள்ளத்தில் தலையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று த முத்துகுமாரின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முத்துக்குமாரும், அவருடைய தந்தையும், தினமும் ஒன்றாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என்றும் சொத்து பிரச்சினை தொடர்பாக கடந்த 3 நாட்களாக தந்தை- மகன் இடையே தகராறு இருந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தந்தையும், மகனும் மது குடித்த போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் மகன் முத்துக்குமாரை, தந்தை சங்கரே வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். சம்பவ இடத்தில் இருந்து சங்கர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். தச்சு தொழிலாளி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்