ஆரணி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

ஆரணி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-15 22:15 GMT
ஆரணி, 

ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட சிவசக்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகன் ராஜியும் (வயது 23)நெசவு தொழிலாளியாக உள்ளார். ராஜிவுக்கு வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்வதற்காக ஆம்பூரை சேர்ந்த உறவினர் பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பட்டு நெசவு கூடத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஆரணி தாலுகா போலீசில் தனது மகனுக்கு வயிற்றுவலி அதிகமாகி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் ராஜி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சாவுக்கு கடன் தொல்லை காரணமா? அல்லது வேறு ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்