திருவெறும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

திருவெறும்பூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-16 22:15 GMT
திருவெறும்பூர்,

திருச்சி திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 48). இவர் பழங்கனாங்குடியில் நடைபெற்றுவரும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசுப்ரமணியன், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து நவல்பட்டு போலீசாருக்கு பாலசுப்பிரமணியன் தகவல் கொடுத்தார். அதன்பேரில், திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள், திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்