கர்ப்பிணி மகளை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்

காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் கர்ப்பிணி மகளை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-16 22:30 GMT
மும்பை,

மும்பை காட்கோபர் நாராயண் நகரில் உள்ள நடைபாதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார். தகவலறிந்த போலீசார் பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் மீனாட்சி(வயது20) என்பது தொியவந்தது.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததும், கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மீனாட்சியின் உறவினர்களிடம் விசாரித்தனர்.

இதில், அவர் கடைசியாக தந்தை ராம்குமார் சவுரசியா(55) என்பவரை பார்க்க சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பெண்ணின் தந்தையை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அவர் தான் மீனாட்சியை கொலை செய்தது தெரியவந்தது.

மீனாட்சி 4 வருடங்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதில் அவர் தந்தையின் அனுமதியின்றி அந்த நபரை திருமணம் செய்து கொண்டார். இதனால் மகள் மீது கோபத்தில் இருந்த ராம்குமார் சவுரசியா, பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கத்தியால் குத்தி அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்