ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-16 22:55 GMT
சென்னை,

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு டாக்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு மற்றும் அரசு டாக்டர்கள், மருத்துவ பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கம் உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து டாக்டர்கள் சங்கத்தினரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கையான காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தியும், எம்.சி.ஏ. அடிப்படையில் மருத்துவர் பணி இடங்களை குறைக்காமல், நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை ஏற்படுத்த வலியுறுத்தியும், சேவை மருத்துவர்கள் கலந்தாய்வை தொடர்ச்சியாக நடத்த வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலும் காலம் தாழ்த்தி வருகிறது. எங்களது கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் 2 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்துகிறோம். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் நாளை (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் சிகிச்சை அளிக்கப்படும். புறநோயாளிகளுக்கான சிகிச்சையை புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்