நத்தம் அருகே பரிதாபம், குழந்தையை கொன்று தாய் தற்கொலை

நத்தம் அருகே குடும்ப பிரச்சினையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-07-17 22:00 GMT
நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோமணாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. அவருடைய மனைவி சரண்யா (30). இவர்களுக்கு வருண் (2½) என்ற மகன் இருந்தான். இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரண்யா தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்தால் தனது குழந்தை அனாதையாகி விடுவான் என எண்ணினார். இதனால் குழந்தையை கொன்று விட்டு தன்னுயிரை மாய்த்து கொள்ள சரண்யா தீர்மானித்தார்.

அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனதை கல்லாக்கி கொண்டு தனது குழந்தைக்கு விஷத்தை கொடுத்தார். மேலும் தானும் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் சரண்யாவும், குழந்தையும் மயங்கி விழுந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்