அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த வாலிபர் கடத்தல்; 2 பேர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த வாலிபரை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-17 23:00 GMT

பூந்தமல்லி,

மீஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). இவர், படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். தனக்கு அரசு அதிகாரிகள் அதிகளவில் பழக்கம். தன்னால் அரசு வேலை வாங்கி தர முடியும் என்று நண்பர்களிடம் தெரிவித்தார்.

இதனை அறிந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி (40) ரூ.10 லட்சமும், கண்ணன் (38) ரூ.35 லட்சமும் அரசு வேலைக்காக கார்த்திகேயனிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் கார்த்திகேயன், சொன்னபடி 2 பேருக்கும் அரசு வேலை வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திகேயன், தனது அக்கா ஷாலினி (30) உடன் காரில் சென்னை அமைந்தகரை வந்தார். அங்குள்ள தனியார் மால் அருகே அக்காவை இறக்கி விட்டு நண்பரை பார்க்க சைதாப்பேட்டை சென்று வருவதாக கூறிச்சென்ற கார்த்திகேயன் அதன்பிறகு மாயமானார். அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ஷாலினி, தனது தம்பி மாயமானது குறித்து அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து மாயமான கார்த்திகேயனை தேடி வந்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திகேயனை, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த கோபியும், கண்ணனும் ராமநாதபுரத்துக்கு கடத்திச் சென்றது தெரிந்தது. மேலும் செல்லும் வழியில் காரில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் கார்த்திகேயனை விடுவிப்பதற்காக மீண்டும் இருவரும் கடத்தி சென்ற காரிலேயே அவரை அமைந்தகரைக்கு அழைத்து வந்தனர். இதையறிந்த போலீசார், கார்த்திகேயனை பத்திரமாக மீட்டனர்.

இது தொடர்பாக கோபி, கண்ணன் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மீட்கப்பட்ட கார்த்திகேயன், பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து மோசடி செய்து உள்ளார். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதும் விசாரணையில் தெரிந்தது. பின்னர் கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்