4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில், டாக்டர்கள் வேலை நிறுத்தம் பொதுமக்கள் அவதி

கும்பகோணத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2019-07-18 23:00 GMT
கும்பகோணம்,

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் சேவைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடந்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதன் காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் பிரபா கரன் மட்டுமே பணியில் இருந்தார். அதேநேரத்தில் சிகிச்சை பெறுவதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

பொதுமக்கள் அவதி

இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகரன், சிகிச்சை பணிகளை மேற்கொண்டார். ஒருவர் மட்டுமே பணியில் இருந்ததால் பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது.

டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். 

மேலும் செய்திகள்