ஊஞ்சலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் சாவு

ஊஞ்சலூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-07-19 22:15 GMT
ஊஞ்சலூர்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திபுரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். அவருடைய மகன் பிரபு (வயது 22). திருமணம் ஆகாதவர். கரூரை சேர்ந்த மண்மங்களம் பகுதியை சேர்ந்த நேரு என்பவரின் மகன் ஆறுமுகம் (27). பிரபுவும், ஆறுமுகமும் மோட்டார்சைக்கிளில் கரூரில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார்சைக்கிளை பிரபு ஓட்டினார். ஆறுமுகம் பின்னால் உட்கார்ந்து இருந்தார். ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே மோட்டார்சைக்கிளில் பாசூர் பழனிக்கவுண்டன்புதூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் இளங்கோவன் (38) வந்து கொண்டிருந்தார்.

எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிள்களில் இருந்து 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் சிறிது நேரத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த இளங்கோவனையும், ஆறுமுகத்தையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இறந்தார். ஆறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்த இளங்கோவனுக்கு கனகா (27) என்ற மனைவியும், பவித்ரா (5), அசுவிதா (4) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இது குறித்து மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்