3 வயது குழந்தையுடன் ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை

திருவாரூர் அருகே 3 வயது குழந்தையுடன் ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-20 23:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள ராம்கே நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 45). இவருடைய மனைவி கோமதி(37). இவர்களுக்கு நாகஸ்ரீ(8), நவஸ்ரீ(3) ஆகிய 2 பெண் குழந்தைகள். செல்வம், கோவையில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். கோமதி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று திருவாரூரை அடுத்த கேக்கரை ரெயில்வே கேட் அருகே கோமதி தனது மகள் நவஸ்ரீயுடன் உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் அங்கு சென்று கோமதி, நவஸ்ரீ ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கோமதி, தனது மகள் நவஸ்ரீயுடன் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதி தனது 3 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்