நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் அன்பழகன் தகவல்

நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-20 22:45 GMT
கரூர்,

பிரதம மந்திரி கிரிஸி சஞ்சய் யோஜனா திட்டத்தில் குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர் பாசன திட்டமானது தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை நீர் வளம் குறைந்து கொண்டே வரும் இந்த சூழலில் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சிறு, குறு விவசாயிகளுக்கு (100 சதவீத மானியத்தில்) நுண்ணீர் பாசன அமைப்புகள் எக்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஜி.எஸ்.டி. வரியையும் சேர்த்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

பயன் பெறலாம்

சிறு மற்றும் குறு விவசாயிகள் காய்கறி மற்றும் இதர பயிர்களுக்கு 5 ஏக்கர் வரை இலவசமாக நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக்கொள்ளலாம். இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்தில் 12.50 ஏக்கர் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம். இந்த திட்டம் கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்பாண்டில் சுமார் 3,000 எக்டர் பரப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கிராம அடங்கல், கணினி சிட்டா, நிலவரைப்படம், சிறு-குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்