வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-07-21 22:30 GMT
மோகனூர், 

மோகனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 42). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் மோகனூருக்கு சென்றார். நவலடியான் கோவில் காடு அருகே ஒருவளைவுபகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர் அருகே உள்ள கோப்பணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (60). இவர் அதே பகுதியில் உள்ள சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வீரப்பன் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே வீரப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்