நாகர்கோவில் இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

நாகர்கோவில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-21 23:00 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசபெருமாள் குமார். இவருடைய மகன் அர்ஜூன்(வயது 17). இவருடைய நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(21) கட்டிட தொழிலாளி. கடந்த 7-ந்தேதி அன்று என்.ஜி.ஓ.காலனி அருகே அர்ஜூனும், அஜித்குமாரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, ஒரு கும்பல் அவர்களை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த கொலை வழக்கில் என்.ஜி.ஓ. காலனி அருகே காமராஜ் சாலையை சேர்ந்த ரமேஷ்(30), ராமச்சந்திரன் என்கிற மோகன், வண்டிக்குடியிருப்பு அழிச்சன்காட்டுவிளையை சேர்ந்த சுந்தர் (27), நிஷாந்த் (20) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய ரமேஷ்(30), சுந்தர் (27) ஆகிய 2 பேர் சென்னையில் உள்ள ஒரு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் ஒருவர் கைது

இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய நிஷாந்த் வெளியூர் தப்பி செல்ல முயல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வல்லன்குமாரன்விளை பஸ் நிறுத்தத்தில் வைத்து வெளியூர் தப்பி செல்ல முயன்ற நிஷாந்தை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ராமச்சந்திரனை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தலைமறைவாக உள்ள ராமச்சந்திரனை பற்றிய ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர், உள்மாவட்டத்தில் பதுங்கி இருப்பதும், அவரது செல்போன் எண் பற்றிய விவரமும் கிடைத்துள்ளது. அதன் மூலம் அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் பிடிபடுவார்’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்