மழை நீர் சேகரிப்பு பணிகளை கண்காணிக்க உத்தரவு

மழைநீர் சேகரிப்பு பணிகளை கண்காணிக்க செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2019-07-21 22:45 GMT
பேரையூர்,

மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், டி.கல்லுப்பட்டி,பேரையூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளையும், குடிநீர் மேம்பாட்டு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.டி.கல்லுப்பட்டி பண்டார ஊருணியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடம், டி.கல்லுப்பட்டி, தேவன் குறிச்சி ஆகிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு அரசு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் அவர், பேரையூர் பகுதியில் நடைபெறும் மழைநீர் சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் மழைநீர் சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்ய குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளது.அவற்றை கண்காணிக்க செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னர் பேரூராட்சி உதவி இயக்குனர் கூறியதாவது-

மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. முதல் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை வளர்த்து அதன் மூலம் மழை பெய்யும் காரணிகளை ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தவும், மரக்கன்றுகள் வளர்க்கவும் செயல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுஉள்ளது.

பேரையூர்,எழுமலை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது உதவி பொறியாளர் சுரேஷ் குமார்,செயல் அலுவலர்கள் சின்னசாமிபாண்டியன்,ஜெயமாலு,பொறியாளர் மீனா குமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்