ஆலங்குடி அருகே போலி மதுபானம் தயாரித்த 3 பேர் கைது

ஆலங்குடி அருகே போலி மதுபானம் தயாரித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-22 23:15 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அய்யம்பட்டியில் சின்னையா என்பவரது வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உத்தரவின்படி நேற்று ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், தனிப்பிரிவு மகாதேவன் மற்றும் போலீசார் அதிரடியாக சின்னையா வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

சோதனையில் அவரது வீட்டில் உள்ள ஆட்டு தொழுவத்தில் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் மற்றும் 528 மதுபாட்டில்கள் போன்றவை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த ஆலங்குடியை சேர்ந்த இளங்கோவன் மகன் பாலு (வயது 32), புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த மணி மகன் ஜெயராஜ் (35). நாகப்பட்டினத்தை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார் (44) ஆகிய 3 பேரை போலி மதுபானம் தயாரித்ததாக கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலி மதுபானம் தயாரிப்பதற்கான பயன்படுத்தப்படும் பொருட்கள், எரிசாராயம், மதுபாட்டில்கள் மற்றும் ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மெர்லின் சகாயராஜ் மற்றும் வீட்டின் உரிமையாளர் சின்னையா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்