காதல் திருமணம் செய்த கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி மர்ம சாவு கணவரிடம் போலீசார் விசாரணை

ஒரத்தநாட்டில், காதல் திருமணம் செய்த கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-22 23:15 GMT
ஒரத்தநாடு,

‘வாட்ஸ்-அப், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும் தவறான நட்பால் பல்வேறு குடும்பங்களில் துயர சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நாட்டின் எதிர்கால தூண்கள் என்று கருதப்படும் மாணவ, மாணவிகள்தான் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை இவைகளை பயன்படுத்துவதற்கே செலவிட்டு வருகிறார்கள் என்பதுதான் வேதனையான செய்தியாகும்.

இவைகளை பயன்படுத்துவதன் மூலம் படித்து பட்டங்கள் பெற்று பெரிய, பெரிய பதவிக்கு சென்று நன்றாக வாழ வேண்டிய மாணவ, மாணவிகள் சீரழிந்து வருவதுடன் கொலை, தற்கொலை போன்று பாதியிலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் பரிதாப சம்பவங்களும் நடந்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவரது வாழ்க்கை, ‘பேஸ்புக்’ பழக்கத்தால் திசை மாறியதுடன் அந்த வாழ்க்கையும் பாதியிலேயே முடிந்து போன பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் இந்துமதி(வயது 21). இவர், கடந்த 2017-18-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து கால்நடை மருத்துவர் படிப்பு படித்து வந்தார்.

இவருக்கும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் சதீஷ்குமார்(28) என்பவருக்கும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் பேஸ்புக்கில் பேசி வந்ததுடன் அடிக்கடி நேரிலும் சந்தித்துக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் இவர்கள் ஒரத்தநாடு எழுத்துகாரத் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கு குடும்பம் நடத்தி வந்தனர். இந்துமதி அந்த வீட்டில் இருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று படித்து வந்தார்.

எலக்ட்ரீசியனான சதீஷ்குமார், அங்குள்ள ஒரு கடையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்துமதி, தான் வசித்து வந்த வீட்டின் உத்திரத்தில் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ், இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து தாளவாடியில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார், இந்துமதியின் கணவர் சதீஷ்குமாரை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்துமதியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவில் வேறு ஏதும் மர்மம் இருக்கிறதா? என்பது பற்றி விபரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்