தூத்துக்குடியில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தூத்துக்குடியில் காலிக்குடங்களுடன் பெண்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-22 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் தூத்துக்குடி 4-ம் கேட் அருகே மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், மாநகராட்சி வடக்கு மண்டல ஆணையாளர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்