ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிர்வாகி வீட்டை கொளுத்தியவர்களை கைது செய்ய கோரிக்கை

தஞ்சை அருகே ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிர்வாகி வீட்டை கொளுத்தியவர்களை கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினரை தஞ்சை கலெக்டரிடம் ஒப்படைக்க பானை, தகரப்பெட்டியுடன் வந்தவர்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-22 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோட்டை மேலையூர் மாதவன்குடிகாடு இந்திராநகரை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது42). இவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது குடிசை வீட்டிற்கு தீ வைத்தவர்களை கைது செய்து அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் தமிழ் தேசிய பாதுகாப்பு கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் இளங்கோவன் குடும்பத்தினரை தஞ்சை கலெக்டரிடம் ஒப்படைக்கும் நூதன போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இருசக்கர வாகனம், கார்களில் வந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளங்கோவனை பாப்பாநாடு போலீசார் கைது செய்தனர். இருந்தாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகரப்பெட்டி, பானை, அடுப்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தகரப்பெட்டி, பானையுடன் செல்வதற்கு அனுமதி கிடையாது. மனு கொடுக்க வேண்டும் என்றால் அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மீறி சென்றால் கைது செய்வதாக கூறினர்.

இதையடுத்து 5 பேர் மட்டும் சென்று கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு அளித்தனர். அதை படித்து பார்த்த கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்று உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 15 பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்