உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம்.கார்டை மாற்றி ரூ.71 ஆயிரம் திருட்டு

உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.71 ஆயிரம் திருடியவரை கைது செய்ய வேண்டும் என தஞ்சை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் ஒருவர் மனு அளித்தார்.

Update: 2019-07-22 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெலுங்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், நான் ஒரத்தநாட்டில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றேன். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர், பணத்தை எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கினார். நானும் கார்டை கொடுத்தேன். அவரும் எந்திரத்தில் கார்ரை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது பணம் வராததால் ஒரு கார்டை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

நானும் அந்த கார்டுடன் வீட்டிற்கு வந்துவிட்டேன். 2 நாட்கள் கழித்து மீண்டும் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். கார்டை எடுத்துபார்த்தபோது அதில் ஜெயக்குமார் என்ற பெயர் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வங்கிக்கு சென்று நடந்த விவரத்தை தெரிவித்தேன். அவர்கள் எனது வங்கி கணக்கை பார்த்தனர். அதில் பல தவணைகளில் ரூ.71 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்து தெரியவந்தது. இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஒரு முறை மட்டும் என்னை விசாரணைக்காக அழைத்தனர்.

பணத்தை மீட்க வேண்டும்

அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனவேதனைக்கு ஆளாகியுள்ளேன். குழந்தைகளின் கல்வி செலவிற்காக வைத்திருந்த பணத்தை பறிகொடுத்துவிட்டு கஷ்டப்பட்டு வருகின்றேன். எனவே என்னை ஏமாற்றி ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற நபரை கைது செய்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்