பொன்னேரியை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சோழங்கம் என்றழைக்கப்படும் 750 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்னேரி உள்ளது.

Update: 2019-07-22 22:45 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சோழங்கம் என்றழைக்கப்படும் 750 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொன்னேரி உள்ளது. இந்த ஏரியை ஆழப்படுத்தினால் சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த நிலையில் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த இடைகட்டு, உட்கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம், வீரசோழபுரம், குலோத்துங்க நல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இதுவரை இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது உள்ள மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுத்தமல்லியில் உள்ள நீர்த்தேக்கதிட்டத்தையும், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியையும் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். பொன்னேரியில் நீர்பிடிப்பு பகுதியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதி வரை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் உடனடியாக பொன்னேரியை ஆழப்படுத்த உத்தரவிட்டார். இதற்கான பணி தொடங்கப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியை ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்