திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சட்டக்கல்லூரி மாணவர் சாவு

திருவள்ளூர் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சட்டக்கல்லூரி மாணவர் பலியானார். உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-22 23:05 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கத்தை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் தேவபுத்திரன் (வயது 24). இவர் பெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பட்டரைபெரும்புதூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவபுத்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த நண்பர் லேசான காயத்துடன் தப்பினார்.

இது பற்றி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, தேவபுத்திரன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தேவபுத்திரன் உடலை மருத்துவர்கள் நீண்ட நேரமாகியும் பிரேத பரிசோதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திரளான சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை எதிரே உள்ள திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அனைவரும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்