திருப்போரூர் அருகே தலையில் கல்லை போட்டு பெண் கொலை மகனிடம் போலீசார் விசாரணை

திருப்போரூர் அருகே தலையில் கல்லை போட்டு பெண் கொலை செய்யப்பட்டார். இது குறித்து அவரது மகன், பேரன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-07-26 22:30 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த வெண்பேடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற கெங்கம்மாள் (வயது 70). இவருக்கு 2 மகன், 2 மகள் இருந்த நிலையில் இவரது கணவரும் டில்லி என்ற மகனும் ஒரு மகளும் இறந்து விட்டனர். இதையடுத்து கெங்கம்மாள் டில்லியின் மனைவியும், மருமகளுமானான பார்வதியுடன் வசித்து வந்தார். மற்றொரு மகனான சங்கருடன் 10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை வெண்பேடு சாலையில் ஓரமாக நடந்து சென்ற கெங்கம்மாள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது, கெங்கம்மாள் அந்த பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

காயார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் டீ வாங்கி தருவதாக கெங்கம்மாளை காட்டூருக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. சொத்து பிரச்சினையில் கெங்கம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து படித்தோட்ட தெருவில் வசிக்கும் கெங்கம்மாளின் மகன் சங்கர், பேரன்கள் கார்த்திக், யுவராஜ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்