கடையம் அருகே வனப்பகுதியில் பதுங்கி இருந்த வழிப்பறி திருடன் கைது

கடையம் அருகே வனப்பகுதியில் பதுங்கி இருந்த வழிப்பறி திருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-26 22:15 GMT
கடையம்,

கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமம் அருகில் கடனாநதி அணை உள்ளது. இந்த அணையின் மேல்பகுதியில் பிரசித்திபெற்ற சித்தர்கள் வாழும் அத்ரி என்ற கோரக்கநாதர் கோவில் உள்ளது.

இந்த கோவில் மேல்பகுதியில் உள்ள கோரக்கநாதர் பீட் பகுதியில் கடந்த 19-ந் தேதி கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும்வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குடிலில் ஒருவர் பதுங்கி இருந்தார். அவரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரை கடையம் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றுவிசாரணை நடத்தினர். அதில், அவர் கடலூர் மாவட்டம் ஐவதக்குடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்பிரமணியன் (வயது39) எனவும், இவர் ரெயிலில் சுத்தம் செய்வது போல் நடித்து பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். மதுரை, சேலம்,கடலூர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவித்து உள்ளார். மதுரையில் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கி 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், வெளியே வந்த பின்னர்இந்த பகுதியில் வந்து பதுங்கி இருந்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறையினருக்கு தெரியாமல் இப்பகுதியில் அவர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, அம்பை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்