குற்றாலம் சிற்றருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலம் சிற்றருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு ரூ.6 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Update: 2019-07-26 22:00 GMT
தென்காசி,

குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் விழுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து ஆனந்ததாக குளித்து செல்கின்றனர். குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிற்றருவி உள்ளது. இந்த அருவி பல ஆண்டுகளாக குற்றாலம் நகர பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் இருந்தது.

இதற்காக நகர பஞ்சாயத்து நிர்வாகம் வனத்துறைக்கு ஆண்டுக்கு ரூ.1 குத்தகை கட்டணம் செலுத்தி வந்தது. இந்த கட்டணத்தை திடீரென செலுத்தாமல் விட்டு விட்டனர். இதனால் வனத்துறை நிர்வாகம் சிற்றருவியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதற்குச் செல்லும் பாதையை அடைத்து பூட்டி விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் சிற்றருவியில் குளிக்க செல்ல முடியவில்லை.

எனவே சிற்றருவிக்கு செல்லும் பாதையை திறந்து அருவியில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் மற்ற அருவிகளை போல சிற்றருவியிலும் குளிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் சிற்றருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு ரூ.6 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த சிற்றருவியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

மேலும் செய்திகள்