சுரண்டை அருகே தெப்பக்குளத்தில் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு

சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளம் உள்ளது.

Update: 2019-07-27 22:00 GMT
சுரண்டை,

நீண்ட காலமாக உபயோகமற்ற நிலையில் உள்ளதால், நீர் வரும் கால்வாய்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. எனவே மழைக் காலத்தில் கிடைக்கும் நீர் மட்டுமே தெப்பக்குளத்தில் தேங்கி கிடக்கிறது.

இந்தநிலையில் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் சிவப்பு நிறமாக மாறியது. இதனால் பொதுமக்களிடையே ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து, வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். குளத்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நுண்ணுயிரியல் பிரிவு பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான சேர்மன் கூறுகையில், “குளத்தின் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறுவதற்கு 2 காரணங்கள் உள்ளது. முதலாவதாக, வீரகேரளம்புதூர் பகுதியில் வவ்வால்கள் அதிகமாக காணப்படுவதால் அதன் எச்சம் மூலமாக சில நுண்ணுயிரிகள் பரவியிருக்கலாம். 2-வதாக, கடலில் காணப்படும் இரும்பு தாதுக்களை உணவாக கொள்ளும் பாசி வகைகள் இந்த குளத்தில் இருக்கலாம். இருந்தபோதிலும் குளத்தில் தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்தால் உண்மையான நிலவரம் தெரியவரும்“ என்றார்.

மேலும் செய்திகள்