சொத்து தகராறில் பயங்கரம்: விவசாயி, மண்வெட்டியால் அடித்து கொலை

சொத்து தகராறு காரணமாக விவசாயி, மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-27 22:15 GMT
குன்னூர்,

சொத்து தகராறு காரணமாக விவசாயி, மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குன்னூர் அருகே உள்ள கேத்தி மேல்ஒடயரட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 56). விவசாயி. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பசவராஜ்(60). இவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு குன்னூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு மேல்ஒடயரட்டி அருகே தொட்டணியில் உள்ள ஒரு தோட்டத்தில் பாலசுப்பிரமணியம் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கும், அங்கு வந்த பசவராஜ் மற்றும் அவருடைய மனைவி குமாரி, மகன் சிவசங்கர் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த பசவராஜ், அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து பாலசுப்பிரமணியத்தின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொலக்கம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுசாமி தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பசவராஜ், குமாரி, சிவசங்கர் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்