செங்கோட்டை அருகே கிணற்றுக்குள் குவியல், குவியலாக கிடந்த மோட்டார் சைக்கிள்களால் பரபரப்பு

செங்கோட்டை அருகே கிணற்றுக்குள் குவியல், குவியலாக கிடந்த மோட்டார் சைக்கிள்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-07-27 22:30 GMT
செங்கோட்டை,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே விசுவநாதபுரத்தை சேர்ந்தவர் இருளப்ப தேவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவருக்கு சொந்தமான தோட்டம் விசுவநாதபுரத்தில் இருந்து பெரியபிள்ளைவலசை செல்லும் சாலையில் அமைந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலையில் இருளப்ப தேவர் மகன் அய்யப்பன் தோட்டத்தில் உள்ள தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அவர் மின்மோட்டாரை ‘ஆன்‘ செய்து தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்றில் இருந்து தண்ணீர் வற்றியது.

அப்போது கிணற்றுக்குள் குவியல், குவியலாக தண்ணீரில் மூழ்கி கிடந்த மோட்டார் சைக்கிள்கள் வெளியே தெரிந்தன. அதை பார்த்து அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிலரது உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மொத்தம் 8 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. கிணற்றுக்குள் இருந்து ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் எடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமானவர்கள் அங்கு கூடி விட்டனர்.

அந்த மோட்டார் சைக்கிள்களை கிணற்றுக்குள் போட்டு சென்ற மர்மநபர்கள் யார்? அவற்றை எதற்காக அங்கு கொண்டு வந்து போட்டனர்? அவை பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டவையா? என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.

இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்