பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியாகும் தகவல் உண்மையல்ல; குமாரசாமி டுவிட்டரில் தகவல்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறி இருப்பதாக ஜி.டி.தேவேகவுடா தெரிவித்திருந்தார்.

Update: 2019-07-28 00:00 GMT

பெங்களூரு, 

காங்கிரஸ் தலைவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பா.ஜனதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) ஆதரவு அளிக்கலாம் என்ற தகவலும் வெளியானது.

இதுகுறித்து முன்னாள் முதல்–மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

பா.ஜனதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு அளிக்க இருப்பதாக வரும் தகவல்கள் உண்மை அல்ல. இதுபோன்று யூகத்தின் அடிப்படையில் பரவும் தவறான தகவல்களை நமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்கள் சேவை மூலம் ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்கலாம். மக்களுக்கான நம்முடைய போராட்டம் தொடரும்.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்