அங்கோலா அருகே, சொத்து தகராறில் தம்பியின் மனைவி, மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெறிச்செயல்

அங்கோலா அருகே சொத்து தகராறில் தம்பியின் மனைவி மற்றும் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-28 22:30 GMT
மங்களூரு,

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகா மட்டகேரி கிராமத்தை சேர்ந்தவர் அஜய் அச்சுத பிரபு (வயது 45). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருடைய தம்பியின் மனைவி மேதா அமிதா (32). மகன் அனுஜ் அமிதா பிரபு (9). அனுஜ் அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆங்கில பள்ளியில் படித்து வந்தான்.

இந்த நிலையில் அஜய் அச்சுத பிரபுவுக்கும் அவருடைய தம்பிக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, அஜய், தனது தம்பியின் வீட்டுக்கு சென்றார். அப்போது அஜயின் தம்பி வீட்டில் இல்லை. மேதா அமிதா, அனுஜ் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர்.

அப்போது சொத்து பிரச்சினை தொடர்பாக அஜய் அச்சுத பிரபு, மேதா அமிதாவுடன் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த அஜய் அச்சுத பிரபு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மேதா அமிதாவை நோக்கி சுட்டார். இதில் ஒரு குண்டு அவருடைய தலையில் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுஜ் தனது தாயின் அருகே ஓடி வந்தான். அந்த சமயத்தில் அவனுடைய தலையிலும் ஒரு குண்டு பாய்ந்தது.

இதில் அனுஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். மேதா அமிதா பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜய் அச்சுத பிரபு, துப்பாக்கியை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்து மக்கள், அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேதா அமிதாவை மீட்டு சிகிச்சைக்காக அங்கோலா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக உடுப்பி மணிப்பால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மேதா அமிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கோலா துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர மரியாலா மற்றும் அங்கோலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மேதா அமிதா வீட்டின் அருகே கிடந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துகொண்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில், சொத்து தகராறில் அஜய் அச்சுத பிரபு, தனது தம்பியின் மனைவி மேதா அமிதா, மகன் அனுஜ் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து அங்கோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அஜய் அச்சுத பிரபுவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்