வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதல்; வாலிபர் பலி நண்பர் படுகாயம்

வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-07-28 22:45 GMT
இரணியல்,

கோதையாறு அருகே குற்றியாறு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன். இவருடைய மகன் விவேகானந்தன் (வயது 26), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர் தினேசுடன் (24) நாகர்கோவிலில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். தினேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். விவேகானந்தன் பின்னால் அமர்ந்திருந்தார்.

வில்லுக்குறி அருகே சென்ற போது பின்னால் வந்த டெம்போ ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விவேகானந்தனும், தினேசும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விவேகானந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தினேசை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள், விவேகானந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டெம்போ டிரைவர் கைது

மேலும் இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவர் நெல்லை மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சக்திவேல் (55) என்பவரை கைது செய்தனர்.

விவேகானந்தன் வருகிற 5-ந் தேதி வெளிநாடு செல்ல இருந்தார். இந்தநிலையில் அவர் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்