காட்கோபரில் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் குத்திக்கொலை 6 பேர் கைது

காட்கோபரில் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-29 22:00 GMT
மும்பை,

மும்பை காட்கோபர் பந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் நிலேஷ் சாவந்த்(வயது27). இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர் அன்று இரவு 8.30 மணியளவில் தனது நண்பர்களுடன் அங்குள்ள பூங்காவில் கேக்வெட்டி பிறந்தநாளை கொண்டாடி கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு கையில் கூர்மையான ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல், திடீரென நிலேஷ் சாவந்த்தை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிஓடியது.

இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலேஷ் சாவந்தை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ராஜவாடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்த கும்பலை சேர்ந்த சங்கேத் நாராயண்(26), மகேஷ் சிவால்கர்(29), பிரசாத் காபத்(22), ரோகன் நிகம்(29), கமலேஷ் ஹோலே(20), யாஷ் நாராயண்(19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய பாபு கேண்டே என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்