சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது

கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-07-29 23:00 GMT
கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபாகாலனி, வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம ஆசாமிகள் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் சம்பவம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி இரவு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள மில் அருகே இருந்த சந்தன மரத்தை மர்ம ஆசாமிகள் வெட்டிக்கொண்டு இருந்தனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம ஆசாமிகள் சந்தன மரத்தை துண்டு, துண்டாக வெட்டி காரில் கடத்தி சென்றனர்.

அப்போது பாரதி பூங்கா அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள், சந்தன மரத்தை வெட்டி கடத்திய காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் அந்த காரை போலீசார் 7 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் துரத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல், மருதமலை சாலையில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியது. அந்த காரை போலீசார் சோதனை செய்த போது துண்டு, துண்டாக வெட்டப்பட்ட சந்தன மரக்கட்டைகள், அரிவாள், ரம்பம் உள்ளிட்டவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த கார் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 45) என்பவருடையது என்பதும், அவர் சேலத்தை சேர்ந்த பலருடன் சேர்ந்து சாய்பாபாகாலனியில் சந்தன மரங்களை வெட்டி காரில் கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர். அவர் கொடுத்த தகவலின் போில் சேலம் வாழப்பாடி புழுதிக்குட் டையை சேர்ந்த வல்லரசு (20) என்பவரையும் போலீசார் கைதுசெய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்