திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானான். அவனுடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.

Update: 2019-07-31 23:30 GMT
நல்லூர்,

திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா பனிக்கப்பட்டி சந்தை பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 40). இவரது மனைவி இந்துமதி. இவர்களுடைய மகன்கள் சதீஸ்குமார் (16), வினித்குமார் (15). இதில் சதீஸ்குமார் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டு கடந்த மாதம் 22-ந் தேதி பெற்றோரிடம் சொல்லாமல் நண்பருடன் திருப்பூர் வந்தார்.

பின்னர் திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகர் 2-வது வீதியில் உள்ள சண்முக சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அறையில் நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வேலை முடிந்து தனது அறைக்கு சதீஸ்குமார் சென்றுள்ளார். பின்னர் குளித்து விட்டு துணியை காய வைக்க அங்குள்ள கம்பியில் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் கீழே மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு சதீஸ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவருடைய பெற்றோருக்கும், ஊரக போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பதறித்துடித்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த சதீஸ்குமாரின் பெற்றோர், தங்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததோடு, உறவினர்களுடன் திருப்பூர் ஊரக போலீஸ் நிலையம் சென்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் “எனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஊரக போலீஸ் நிலையம் முன்பு சதீஸ்குமாரின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்