செல்போனை பயன்படுத்தியவாறு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் கலெக்டர் உத்தரவு

செல்போனை பயன் படுத்தியவாறு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

Update: 2019-08-03 23:00 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பஸ் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் ஆலங்குடியில் இருந்து புளிச்சங்காடு கைகாட்டியை கடந்தும் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை செல்போனில் வாட்ஸ்- அப்பை பார்த்தபடியே சென்றதாக தெரிகிறது.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி செல்போனில் வாட்ஸ்- அப்பை பார்த்தபடியே பஸ்சை ஓட்டிய புதுக்கோட்டை மண்டலத்தை சேர்ந்த அரசு டிரைவர் மூக்கையாவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி கூறுகையில், ‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பஸ் டிவைர்கள் பணி நேரத்தில் கண்டிப்பாக செல்போன்கள் பயன்படுத்த கூடாது. இதனை மீறி செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தொடர்புடைய அலுவலர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்றார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து பஸ் டிரைவர் மூக்கையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்