முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை நிலைப்பாடு - டி.டி.வி.தினகரன் பேட்டி

முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது என ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2019-08-04 00:00 GMT

அறச்சலூர்,

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அவரது மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தீரன் சின்னமலை நினைவு தினம் அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 10 அமைச்சர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே பங்கேற்று உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சொல்ல முடியாது. ஒரு சிலர் சொந்த காரணங்களுக்காகவும், சுயநலத்திற்காகவும் கட்சியை விட்டு விலகி உள்ளனர்.

பெண்களின் பாதுகாப்புக்காக முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது. எந்த ஒரு சட்டம் கொண்டு வரப்படும் போது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த கூடாது. அரசு கொண்டு வரும் சட்டம் அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் எழுகிறது. எனவே ஒரு சட்டம் நிறைவேற்றப்படும்போது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அடிப்படையிலான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.

முத்தலாக் மசோதா விவகாரத்தில் மக்களவையில் ஒரு நிலைப்பாட்டையும், மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாட்டையும் அ.தி.மு.க. எடுத்துள்ளது. உலகிலேயே இது போன்ற நிலைப்பாடு எடுக்கும் கட்சியை நான் கேள்விப்பட்டதில்லை.

இரட்டைத்தலைமை என்ற பெயரில் மக்கள் விரும்பாத ஆட்சி நடக்கிறது. ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி ஆட்சி நடத்திக் கொண்டு இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அ.தி.மு.க. இரட்டைத் தலைமையாக இருப்பதால், முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து இருக்கலாம்.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடக்குமா என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடந்தால் நிச்சயமாக போட்டியிடுவோம். தமிழகத்தில் விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என்பது தமிழக மக்களின் எண்ணம். ஆனால், மத்திய அரசு அதனைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது வருத்தமளிக்கிறது.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்