விவசாயி கொலை வழக்கு: தொழிலாளி கைது

விவசாயி கொலை வழக்கில் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-04 23:00 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் வடக்கு நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது40). விவசாயி. இவர் கடந்த மே மாதம் 26-ந் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே ஜெயக்குமாரின் தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் ஆ.குரும்பலூர் பகுதியை சேர்ந்த ராமன் (வயது54) என்பவர் திடீரென மாயமானார். இதனால் ராமன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த ராமனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சம்பளம் தொடர்பாக விவசாயி ஜெயக்குமாருக்கும், ராமனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், ஜெயக்குமாருடன் ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்து வந்த சிலரும், ராமனும் சேர்ந்து ஜெயக்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராமனை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கண்ணந்தங்குடி பகுதியில் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன் (54) என்பவரும் பணத்துக்காக ராமனுடன் சேர்ந்து ஜெயக்குமாரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்