சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை

சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கடனை திருப்பி கொடுக்காததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2019-08-04 22:15 GMT
கருப்பூர், 

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் ஜாகீர் அம்மா பாளையம் அவ்வையார் நகரை சேர்ந்தவர் அபிமன்னன்(வயது 42), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி(38). இவர்களுக்கு கீர்த்தி (14) என்ற மகன் உள்ளான். இவன் சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் ரேவதி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அவர் சூரமங்கலம் அடுத்த சோளம்பள்ளத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் உள்ளார்.

அபிமன்னனின் சொந்த ஊர் ஆத்தூர் அருகே உள்ள ராஜநாயக்கன்பாளையம் ஆகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இவர் தனது சொந்த ஊரில் இருந்து சேலத்திற்கு வேலைக்காக வந்து விட்டார். இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரில் உள்ள பூர்வீக நிலத்தை விற்றதில் அபிமன்னனுக்கு கிடைத்த ரூ.10 லட்சத்தை அவரது அண்ணன் மற்றும் அண்ணன் மகன்கள் கடனாக வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த அபிமன்னன் தன்னிடம் கடன் பெற்ற அண்ணன் மற்றும் அண்ணன் மகன் என உறவினர்களிடம் நீங்கள் பணத்தை கொடுக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறி சமீபத்தில் அவர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போதும் பணம் திரும்ப கிடைக்காததால் மனம் உடைந்த அபிமன்னன் நேற்று காலையில் சேலம் கருப்பூர் கரும்பாலை பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்துக்கு அடியில் வந்துள்ளார். அங்கு காலையில் வந்த ரெயில் முன்பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே அவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பது குறித்து அந்த வழியாக வந்தவர்கள் நேற்று காலை 9 மணியளவில் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அபிமன்னன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உறவினர்கள் கடனை திருப்பி கொடுக்காததால் தச்சு தொழிலாளி ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்