அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு ஆட்டோவில் பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது

சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி முன்பு, ஆட்டோவில் பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Update: 2019-08-07 22:30 GMT

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் நாடார் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். அவருடைய மனைவி லதா. 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை லதாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை ஆட்டோவில் சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அந்த ஆட்டோ சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி முன்பு வந்தபோது, லதாவுக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடந்து, அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தகவல் அறந்து ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் தீபா மற்றும் செவிலியர்கள், மருத்துவக்குழுவினர் ஓடி வந்து லதாவுக்கு முதல் உதவி அளித்தனர். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்குள் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த நேரத்தில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம், அதே அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்து கொண்டிருந்தார். ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது குறித்து தகவல் அறிந்த மாணிக்கம் எம்.எல்.ஏ., லதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரித்தார். பின்னர் உதவித்தொகை வழங்கினார். அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.

பின்னர் லதாவும், குழந்தையும் மேல்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும் தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்