குளச்சல் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-08 22:45 GMT
குளச்சல்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதை தடுக்க வருவாய்த்துறையினர், போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் குமரி பறக்கும் படை தாசில்தார் சதானந்தன் தலைமையில் தனித்துணை தாசில்தார் அருள் லிங்கம், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் உள்ளிட்டோர் குளச்சல் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோடிமுனை அருகே உள்ள ரேஷன்கடை அருகில் சந்தேகத்திற்கு இடமாக தார்பாயால் மூடப்பட்டிருந்த இடத்தை சோதனை செய்தனர்.

கேரளாவுக்கு கடத்தல்.....

அப்போது சிறு, சிறு மூடைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை உரிமை கோர யாரும் இல்லை. மேலும் விசாரணையில், கேரளாவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து உடையார்விளையில் உள்ள அரசு குடோனில் ஒப்படைத்தனர். மேலும் இதனை அங்கு பதுக்கி வைத்திருந்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்