சொத்து பிரச்சினையில் பரிதாபம்: மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை-சகோதரர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

பெங்களூருவில் சொத்து பிரச்சினையில் மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-08-09 22:04 GMT
பெங்களூரு,

பெங்களூரு சி.வி.ராமன்நகரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்தவர் அர்ஜூன்(வயது 45). இவர், மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் ஊழியராக பணியாற்றினார். அர்ஜூன் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அர்ஜூன் திடீரென்று குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுபற்றி அறிந்ததும் பையப்பனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அர்ஜூன் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது சொத்து பிரச்சினை காரணமாக அர்ஜூன் தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது.

அதில், சொத்து பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு சகோதரர் அனில்குமார், உறவினர் பிரசாத் மற்றும் 3 நண்பர்கள் காரணம் என்றும் எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீசார் அனில் குமார் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து பிரச்சினையில் மத்திய அரசு ஊழியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்